Sunday 20 May 2012

என்ன செய்யவேண்டும் நாங்கள்….


 
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பாக உங்களிடம் பேசுகிறேன்

எமதமைப்பானது உலகில் எங்கு மக்கள் இனத்தின் பெயரால், மொழியின்பெயரால்,இனவெறிக்கும்,மதவெறிக்கும் பாதிக்கப்படுகிறார்களோ அம் மக்களுக்காக அவர்களின் குரலாக, அவர்களுக்காக பேச வேண்டும்,போராடவேண்டும் என்ற உயரிய நோக்கோடு நாங்கள் செயல்பட்டுவருகிறோம். நாங்கள் என்றால் நீங்கள் எண்ணுவது போல் பெரும் கூட்டமல்ல உணர்வு மிக்க சில இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட        இவ்வமைப்பானது இன்று தமிழகத்தில் பெரிதாக கண்டுகொள்ளப்படாத   சிறைவாசிகளின் விடுதலைக்கான போராட்ட களத்தை பொதுசமூகத்திடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற ஒற்றைக்கோரிக்கையோடு களமாடி வருகிறோம். சிறைவாசிகளின் விடுதலை என்ற ஒற்றை முழக்கத்தோடு அனைத்து தரப்பு மக்களையும்,இயக்கங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு பொதுமேடையாக நாங்கள் செயல்பட்டுவருகிறோம். எங்களுக்கான தனிப்பட்ட அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை.
அனைத்து அரசியல்,சமூக இயக்கங்களை ஒன்று படுத்தி சிறைவாசிகளின் விடுதலைக்கான தமிழக சூழலில் ஒரு களத்தை அமைத்துள்ளோம். நாங்கள் ஒரு சார்பான அரசியலையோ,கொள்கைகளையோ முன்னெடுப்பவர்கள் அல்ல.
இப் பின்னணீயில் இருந்துதான் நாங்கள் தமிழகத்தில் போதுமான அளவு கவனம் கொள்ளாத சிறைவாசிகளின் விடுதலைக்கோரிக்கைகளுக்காக மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான தொடர் அரசின் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறோம். இதுவரை திருப்பூர்,கோவை என இரண்டு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தியுள்ளோம். பொதுதளத்தில் இருந்தும்,இசுலாமிய அமைப்புகளிடம் இருந்தும் இந்நிகழ்விற்கான ஆதரவு சிறப்பாக இருந்து வருகிறது.
இத்தொடர் கூட்டங்களுக்கான செலவு மிக கடுமையானது. எங்களின் சொந்த உழைப்பில் இருந்தும், எங்கள் நண்பர்கள்,தோழர்கள் உதவியுடன் இந்நிகழ்வுகளை நடத்திவருகிறோம். ஆனாலும் போதுமான பொருளாதார பலம் இன்றி சோர்வுகள் வந்தாலும்
துணிவோடு அணியாகி போராடு
நீ அழிவாகி போனாலும் வரலாறு
 என்ற நம்பிக்கையோடு போராடுகிறோம். இது எம்மை பற்றிய சிறு அறிமுகம் தோழர்களே.
ஆனாலும் மனம் வாடிய நிலையில் என்ன செய்ய போகிறோம்
எமது போராட்டம் போதுமானதா?
எமது சகோதரர்களின் விடுதலையை எப்படி வென்றெடுக்கப்போகிறோம்.
நாம் மட்டும் சடங்காக சில பொதுக்கூட்டங்களை நடத்தினால் எமது போராட்டம் வெல்லுமா? என்ற கேள்விகளுடன் தொடங்குகிறேன்….

இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து
அரசியல் சிறைவாசிகளின் விடுதலையை மக்களிடம்
கொண்டு செல்வோம்
செப்.15 அவர்களின் விடுதலையை வென்றெடுப்போம்…!
ஆம் இதுதான் நமது முழக்கம்
தமிழக அரசியல் களத்தில் இன்று பேசப்படும் ஆனால் போதுமான அளவு பேசப்படாத செய்தியாக இசுலாமிய,அரசியல், ஆயுள்சிறைவாசிகளின் விடுதலை குறித்த செய்தியாக இருந்துவருகிறது.
சிறைவாசிகளின் விடுதலைக்கான ஒரு தொடர் ஓட்டத்தை நாங்கள் பொது சமூகத்தில் தொடங்கிவைத்துள்ளோம்.
அது பொது சன பார்வையை, அரசின் பார்வையை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் சிறைவாசிகளின் விடுதலைக்கான ஏக்கங்களை பிரதிபளிக்கும் வகையில் நாம் முன்னெடுத்துள்ளோம்.

அன்பானவர்களே….
உங்களின் மனம் கனிந்த பார்வையை
பல்லாண்டுகாலமாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள்,அரசியல் சிறைவாசிகள்,சாதிய கொடுமைக்கு எதிராக களமாடி சிறை சென்ற தலீத் விடுதலைபோராளிகள், ஆத்திரத்திலும்,சூழல்காரணமாகவும் சிறைபட்ட ஆயுள் சிறைவாசிகளின் மீது சற்று திருப்புங்களேன்.
உங்களின் இதயத்தை திறந்து சிறைவாசிகளின் துயரத்தை கேளுங்களேன்.

சிறையும்,தண்டனையும்
ஒரு குற்றத்திற்க்கு தண்டனையாக ஒருவருக்கு சிறைதண்டனை,
மரணதண்டனை, ஆயுள்சிறை,அபராதம் விதித்தல் போன்றவை இந்திய தண்டனை சட்டம் குற்றத்திற்க்கு ஏற்ப வகைப்படுத்துகிறது.
ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் தண்டனைகளுக்கான நோக்கத்தையோ
அல்லது தண்டனைக்கு பின்னிட்ட அந்த நபரின் வாழ்க்கையை பற்றியோ எதுவும் கூறாததுதான் இங்கு கவனிக்கப்படவேண்டியது.
இந்திய தண்டனை சட்டங்கள் பெரும்பான்மையானவை அடிமை இந்திய சட்டங்களே, காவல் சட்டம்,தண்டனைச்சட்டங்கள் தற்போதைய சமூகவாழ்வு முறை, பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படவில்லை இந்நிலையில் இருந்தே குற்றம் அதற்க்கு பகரமாக விதிக்கப்படும் தண்டனைகளையும் நாம் பார்க்கவேண்டும்.
குற்றமும் அதற்க்கு காரணமான சமூக பொருளாதார,மற்றும் மக்களுக்கான போராட்டங்களினால் தளைப்படுத்துவதையும் பார்க்காமல் ஒருவரின் முடிவில்லா சிறைவாழ்வை தீர்மாணிப்பது எவ் வகையில் நியாயம் என்பது விளங்காத புதிர்.
ஒரு குற்றம் என்று வரையருக்கும் நீதிமன்றங்கள் தண்டனை விதிப்போடு தனது கடமையை முடித்துக்கொள்கிறது.
அதற்க்கு பின்னிட்ட நாட்களில் சிறைப்பட்ட சிறைவாசியின் முழு வாழ்வு முறையை தீர்மாணிப்பது சிறைச்சாலையும் அதனைகோளேச்சும் சிறைதுறை அதிகாரிகளும்தான்.

ஒருவரை ஆயுள் முழுவதும் சிறைவைப்பது அவரின் அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்துவது.
அவருக்கும் சமூகத்திற்க்குமான தொடர்பை அறுத்துவிடுவதும்.  அவர் தன்னுடைய குடும்பத்திற்கான கடமைகளை நிறைவேற்றுவதில் இருந்து தடுப்பதும்.
சிறைவாசியின் மனம் சார்ந்த, உடல் சார்ந்த அனைத்தையும் தடுப்பதும்
மொத்தத்தில் செத்த பிணத்திற்க்கு சமமானதும் ஒன்றுதான்.
ஆம் நண்பர்களே சிறையில் வாடிவரும் சிறைவாசிகள் இறந்தவர்களை போல்தான் வாழ்ந்து வருகிறார்கள்.
முடிவில்லா சிறைவாசத்தால் அவர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை அவர்கள் குடும்பம்,மனைவி,குழந்தைகள் உறவுகள் என்று பாதிப்புகள் ஏராளம்.
சர்வதேச நாடுகளும் ஐ.நா மன்றமும் மனித உரிமைகள் பற்றியும், குழந்தைகளின் உரிமைகளை பற்றி பேசும் அதேவேளையில் சிறைப்பட்டவர்களின் குடும்பம், குழந்தைகளின் உரிமைகளும் அவர்களின் எதிர்காலம் பற்றி யார்பேசுகிறார்கள் இங்கு குழந்தைகளின் உரிமைகள் பாதிக்கப்படவில்லையா?
அரசுகள் இவர்களுக்கு ஏதேனும் உதவிகள் செய்கிறதா?
சிறைப்பட்டவர்களின் குடும்ப நிலை குறித்தான பார்வையும், விவாதங்களும்
எழுப்பப்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் இன்னும் கேட்கப்படாமலேயே உள்ளது.
 இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கான தொடர் போராட்டங்கள்
தமிழகத்தில் மத வெறியாட்டமும் அதற்க்கு எதிரான இசுலாமியர்களின் எதிர்வினைகளினால் தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் காவல்துறையின் கோரத்தாக்குதல்களுக்கும்,பொய் வழக்கினால் சிறைப்பட்டும் அவதியுற்றனர்,
ஒரு ஊரில் சரி பாதி இசுலாமிய மக்கள் போலீசின் பயங்கரவாத,தீவிரவாத பூச்சாண்டி அச்சுறுத்தல்களுக்கு ஆட்ப்பட்டார்கள்.
இயக்கம், அரசியல் என்று மக்களோடு களமாடிய பெரும்பான்மையான இசுலாமிய இளைஞர்கள் ஏதோ ஒரு வழக்கில் சிறைக்குப்போனவர்களாகவே இருந்தார்கள் சிறைக்கு போகாதவர்கள் கொஞ்சமே இதில் சிறுவர்கள் கூட தப்பவில்லை.
இசுலாமியர்களை பொது சமூகம் பார்த்த பார்வையே நீங்கள் எல்லாம்
தீவிரவாதிகளா என்று பார்க்கும் அவல நிலையை அரசும்,காவல்துறையும்
கேடுகெட்ட தினமலம் போன்ற ஊடகங்களும் கற்பிதம் செய்ததின் விளைவாக தமிழகத்தில் இசுலாமிய மக்களின் அன்றாட வாழ்வியல் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் இவ் அடக்கு முறைகளுக்கு எதிராக போராடிய இசுலாமிய களப்போராளிகள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் சிறைப்படுத்தப்பட்டார்கள் அவர்களின் விடுதலைக்கான போராட்டம்தான் இன்றும் நடந்துகொண்டிருக்கிறது.
அன்றுமுதல் இன்றுவரை சிறையில் வாடிவரும் இவர்களின் வாழ்வு சிறையிலேயே கழிந்து விடுமோ…?
சரியும்,தவறுமாக பல்வேறு வடிவில் களமாடிய இவர்கள் தங்களின் குடும்ப நலன்,தன் சுயநலனுக்காக சிறை செல்லவில்லை
சமுக களத்தில் கண்டுகொள்ளப்படாத பிரச்சனையான இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கோரிக்கை
நாம் என்ன செய்யப்போகிறோம்

தமிழ்தேசியர்களே..
இடதுசாரிகளே..
சனநாயகபோராளிகளே..
இசுலாமிய சிறைவாசிகள்,அரசியல் சிறைவாசிகள்,ஆயுள்சிறைவாசிகளின் விடுதலைக்கான போராட்டத்தில் உங்கள் பங்களிப்பு என்ன..?
தலைவர்கள்,முன்னணியாளர்கள் இவர்களின் விடுதலைக்கோரிக்கையின் நியாயத்தை புரிந்துகொண்டு ஆதரவு அளித்தாலும் பெரும்பான்மையான தோழர்கள் சிறைவாசிகளின் அவலநிலையை ஏன் பேசுவதில்லை அதிலும் குறிப்பாக இசுலாமிய,அரசியல் சிறைவாசிகள் விடுதலைவிசயத்தில் ஏன் பாரமுகம் தோழர்களே
இந்த தேசத்தின் வளர்ச்சியில், உயர்வில் தியாகங்கள் புரிந்த இசுலாமிய சமுகத்தின் அவலக்குரல் உங்கள்காதுகளுக்கு எட்டவில்லையா..?
2008ம் ஆண்டு 1,400க்கும் மேற்பட்ட ஆயுள்சிறைவாசிகளை செப்.15 அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்தபோதும்கம்யூன் வழக்குகள்,” () சமூகவழக்குகள் என்று குறிப்பிடப்பட்டு இசுலாமிய சிறைவாசிகளுக்கும் மட்டும் சிறப்பு அரசாணைகள் பிறப்பித்து கடந்த ஆட்சியாளர்களால் அநீதி இழைக்கப்பட்டதே இன்றும் மதசிறுபான்மை மக்கள் என்பதால் பாரபட்சம்காட்டப்படுகிறதே
சட்டத்தின் பெயரால் ஒரு பெரும் அநீதி இழைக்கப்படுகிறதே
இதைபற்றிய உங்கள் பார்வை என்ன..?
கடல்கடந்தும்,நாடுகள் கடந்தும் அனைத்து அநீதிகளுக்கும் எதிராக ஒன்றிணைந்து போராடும் நீங்கள் தமிழகத்தில் இசுலாமிய சிறைவாசிகளுக்கு எதிராக நடந்துவரும் அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைய மாட்டீர்களா..?
இவர்களின் விடுதலைக்கான ஆதரவு போராட்டத்தில் உங்கள் குரலும் இணைந்து ஒலிக்காதா…?

எனதருமை இசுலாமிய உறவுகளே…!
கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற போராட்டங்களில் தமிழகத்தில் ராஜீவ்கொலைவழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக மரண கொட்டடியில்
இருந்துவரும் சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகியோருக்கு மரணதண்டனை
உறுதிப்படுத்தியவுடன் எழுந்த எழுச்சிகரமான போராட்டங்கள் வரலாற்றின் பக்கங்களில் வீரம் நிறைந்த மக்கள் போராட்டத்தின் வெற்றியாக பதிக்கப்பட்டது. அவர்களின் மரணதண்டனையை நீக்ககோரி தமிழகம் எழுந்தது எழுச்சியுற்றது. மாணவர்கள்,இளைஞர்கள்,வழக்கறிஞர்கள்,பொது சனம் என்று அனைத்துதரப்பு மக்களும் வீதிக்கு வந்தவுடன் தமிழக அரசும் கொலைவெறிகொண்டு இருந்த மத்திய அரசும், திகைத்து நின்றது.
போராட்டத்தின் உச்சமாக காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றப்போராளி செங்கொடி தன்னைதானே மாய்த்துக்கொண்டாள் நீதிமன்ற காதுகளுக்கும் அரசு இயந்திரங்களுக்கும் பேரிடி தந்தாள் அசையாத அரசு நாற்காலிகள் கூட அசைந்தது நீதிமன்றங்கள் கூட தனது இதயத்தை திறந்தது.
மூன்றுதமிழர்களின் தூக்கு நிறுத்தப்பட்டது.
இப்போராட்டங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டாமா..?
பல்வேறு இயக்கங்கள் சிறைவாசிகளின் விடுதலைக்காக பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் நடத்தினார்கள் அவர்களின் போராட்டங்களை நாம் மதிக்கிறோம் ஆனால் அது போதுமானதா?
அனைவரும் ஒரே அணியில் ஒற்றுமையுடன் நின்று போராடி இருந்தால் ஒருவேளைஇசுலாமிய சிறைவாசிகள் விடுதலை சாத்தியப்பட்டிருக்குமோ ?
என்ற கேள்வியும் வேதனையுடன் எழுவதை தவிர்க்கமுடியவில்லை ஆனாலும் காலம் கடந்துவிடவில்லை இனியேனும் ஒற்றுமையுடன் ஒரே குரலில் களம் காணவேண்டிய காலகட்டம் இது.
இயக்கங்கள்,அதன் உறுப்பினர்கள் மட்டும் போராட்டங்கள் நடத்தினால் போதுமா? மக்களின் ஒட்டுமொத்த பங்களிப்பு இல்லாமல் எந்த போராட்டங்களிலும் வெல்லமுடியாது.
எப்போழுது ஒன்று சேரப்போகிறீர்கள்…?
சிறையில் 14 ஆண்டுகளுக்கு மேல்வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் அநாதைகளா?
மக்களுக்காக சமுகத்திற்க்காக போராடி சிறைசென்ற இசுலாமிய சகோதரர்கள்
சிறையிலேயே செத்து மடியவேண்டுமா?

கோவைமத்தியசிறையில் SLE என்னும் அறியவகை நோயால் மரணநாட்களை தினம் தினம் எண்ணிக்கொண்டிருக்கும் அபுதாஹீரின் விடுதலைக்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்..?
அவனின் மரணமாவது சுதந்திரமாக இருக்கட்டுமே என்று நினைக்கப்போகிறீர்களா?
இல்லை சிறையிலேயே செத்து மடியவிடப்போகிறோமா..?
இரண்டு சிறுநீரகமும்பாதிக்கப்பட்டு இதயநோயாலும் கண்பார்வை மங்கிய நிலையில் அபுதாஹீர் இன்று மரணவாசலில் இசுலாமியன் என்றகாரணத்தாலே சட்டங்கள்கூட பாரபட்சம்காட்டுகிறதே இதற்க்கு என்ன செய்யப்போகிறோம்.
 இது சிறைவாசிகள் மீட்பு பிரச்சனை மட்டுமல்ல
ஒரு சமுகத்தின் உரிமைகளை உறுதிப்படுத்தும் போராட்டம்.
அரசின் அடக்குமுறையை, அவமானப்படுத்தப்பட்டதை கண்டித்து தீக்குளித்து எகிப்தில்இறந்தான் இளைஞன் ஒருவன் அவனுக்கு குறிப்பிட்டநாளில் அஞ்சலி செலுத்தவாருங்கள் என்று முகநூலில் எழுதினால் பெண் ஒருவள்
மக்கள் ஒன்றுதிரண்டார்கள் போராட்டகளம் அமைத்தார்கள் எகிப்தில் ஆட்சி மாற்றமே ஏற்ப்பட்டது.
சிறைவாசிகளின் விடுதலைக்கான களம் அமைத்து இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்கோரிக்கையோடு செப்.15 அன்று விடுதலை செய்யக்கோரி அரசின் கவன ஈர்ப்பு பொதுநிகழ்வுகளை நடத்திவரும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பாக உமர்கயான் இணையம் வாயிலாக உங்களுக்கு கோரிக்கைவைக்கிறேன் ஒன்றுதிரளுங்கள் இது இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கோரிக்கைமட்டுமல்ல
மதபேதத்தால் ஒரு சமூகம் புறக்கணிக்கப்படுகிறது. புறக்கணிக்கப்பட்ட சமுகத்தின் உயிர் பிரச்சனை.
அரசின் கவனத்தை மட்டுமல்ல உங்கள் கவன த்தையும் ஈர்க்க
நாங்கள் என்ன செய்யவேண்டும்….?

எகிப்தில் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக தீக்குளித்து எழுச்சி ஏற்பட காரணமாக இருந்தானே ஒரு இளைஞன்
அவனைபோல்……
தமிழகத்தில் மூன்றுதமிழர்களின் மரணதண்டனையை நிறுத்த கோரி
தீக்குளித்து மாண்டாளே பழங்குடியின போராளி செங்கொடி
அவளைப்போல்….
 இசுலாம்தற்கொலையை கூடாது என்கிறது
எழுச்சிகொள்ளாத என் சமூகத்தை எழுச்சி கொள்ள செய்ய
ஒரு சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க
அரசின்பாரபட்ச போக்கால் 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில்வாடும்
இசுலாமியசிறைவாசிகளின் விடுதலைக்காக
நாங்கள் என்ன செய்யவேண்டும்….
நாங்கள் என்ன செய்தால்
நீங்கள் எழுச்சிகொள்வீர்கள்



1.10ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிக்கொண்டிருக்கும்
இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய கோரி அணிதிரளுங்கள்.

2. மத பேதம் பாராமல் இசுலாமிய ஆயுள் சிறைவாசிகளை எதிர்வரும் செப்டம்பர்15 அண்ணா பிறந்த நாளில் விடுதலை கோரி அணிதிரளுங்கள்.

3. இசுலாமிய சிறைவாசிகள்10 ஆண்டுகள் கழித்து விடுதலைக்கு தகுதியிருந்தும் கடந்த ஆட்சியின் பாரபட்ச போக்கால் விடுதலை செய்யப்படவில்லை கடந்த ஆட்சியின் தவறுகளை களைந்து இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய கோருகிறோம்.

4.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையில் மட்டும் பாரபட்சம் ஏன் தமிழக சிறைகளில் உள்ள இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை கோரி அணிதிரளுங்கள்.

5. மற்ற மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் முடிவில்லா சிறைவாசம் இல்லாமல் 7.10, ஆண்டுகளில் விடுதலை செய்வதைப்போல் தமிழகத்திலும் வாழும் உரிமையை ஆயுள் சிறைவாசிகளுக்கு அளிக்கவேண்டும்.

6.அனைத்து சிறைவாசிகளுக்கும் இருப்பது போல் வழிக்காவல் இல்லாமல் இசுலாமிய சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு அளிக்கவேண்டும் என  தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

7.இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கு தடையாக முந்தைய ஆட்சியாளர்கள் பாரபட்சத்தோடு பிறப்பித்த அனைத்து அரசாணைகளையும் ரத்து செய்ய தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

8.சிறையில் இனம்புரியா நோயில் தினம் செத்துக்கொண்டிருக்கும் அபுதாஹீரை உடனடியாக விடுதலை செய்து அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்ய கோரி அணிதிரளுங்கள்.

9. சாதிய வன் கொடுமைக்கு எதிராக போராடி சிறைபட்டிருக்கும் தோழர் துரைபாண்டி,ஜோதி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சிறையில் இருக்கும், ஒதுக்கப்பட்ட,தமிழ்தேசிய விடுதலைப் போராளிகளை விடுதலை செய்ய கோரி அணிதிரளுங்கள்.

10.சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தமிழீழ அகதிகளை சிறையைவிட
கொடுமையான முகாம்களில் அடைத்து வைத்துள்ளதை எதிர்த்து அணிதிரள்வோம்.

சே.ஜெஉமர்கயான்.
ஒருங்கிணைப்பாளர்.
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.,
தமிழ்நாடு.